தென்மேற்குப் பருவக்காற்று என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் இன்றியமையாத மழை பருவமாகும். தமிழகத்தை தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தென்மேற்கு பருவமழை காலத்திலேயே மழை பெறுகிறது. எனவே நமது இந்திய நாட்டின் ஒட்டுமொத்த நீர்தேவையும் தென்மேற்கு பருவமழையை நம்பியே இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை என்றால் என்ன?
வடக்கு மற்றும் மத்திய இந்திய துணைக் கண்டத்தின் தார் பாலைவனம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் வெப்பமான கோடைகாலங்களில் கணிசமாக வெப்பமடைகின்றன.
இது வடக்கு மற்றும் மத்திய இந்திய துணைக் கண்டத்தின் மீது குறைந்த அழுத்தப் பகுதியை ஏற்படுத்துகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ஈரப்பதம் மிக்க காற்று இந்தியாவின் இந்தியப் பெருங்கடலின் தென் மேற்கு பகுதிலிருந்து அப்பகுதியை நோக்கி வீசுகிறது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் சராரியாக ஜுன் 1 ம்தேதி துவங்குகிறது.
தென்மேற்கு பருவமழையின் அரேபிய கடல் கிளை முதலில் இந்தியாவின் கடலோர மாநிலமான கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாக்குகிறது.
இதனால் இந்த பகுதி தென்மேற்கு பருவமழையில் மழை பெறும் இந்தியாவின் முதல் மாநிலமாக திகழ்கிறது.
கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழைப்பொழிவை கொடுத்த பின்னர் கர்நாடகா – மகாராஷ்டிரா, மேற்கு தொடர்ச்சி மற்றும் கொங்கன் மலை தொடர்கள் உள்ள மாநிலங்கள், மத்திய பிரதேசம்,பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஊடுருவி பின்னர் அசாம்,மேகலாயா போன்ற வடக்கிழக்கு மாநிலங்களில் பரவலாக மழை பொழிவை ஏற்படுத்தும்.
தென்மேற்கு பருவமழையில் அதிகமழை பெறும் பகுதியும் குறைவான மழை பெறும் பகுதியும்:
தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்திய நாட்டிலேயே மிக அதிகமான மழை பெறும் பகுதி மௌசின்ராம் சிரபுஞ்சி ஆகும்.இங்கு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் சராசரியாக 8900 மிமீ மழையை சிரபுஞ்சி பெறுகிறது.
கேரளாவில் அதிகமழை பெறும் பகுதி நெரியாமங்கலம். இங்கு இந்த பருவகாலத்தில் மட்டும் 5883 மிமீ மழை பெறுகிறது. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முக்குருத்தி தேவாலா அவலாஞ்சி பந்தலூர் கோவை மாவட்டம் சின்னகல்லாறு ஆகிய இடங்கள் தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெறும் பகுதிகளாகும். மேலும் செங்கோட்டை புளியரை மாஞ்சோலை நாலுமுக்கு ஊத்து கோதையாறு மருதம்பாறை பேச்சிப்பாறை களியல் ஆகிய இடங்களும் இப்பருவகாலத்தில் அதிகமழை பெறும் தமிழக பகுதிகளாகும்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்தியாவிலேயே மிக குறைவான மழையை பெறும் பகுதி தூத்துக்குடி. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தூத்துக்குடி திருச்செந்தூர் காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம் ஆகிய கடலோர பகுதிகள் சராசரியாக 30 மிமீ மழை மட்டுமே பெறுகிறது. கடந்த 30 ஆண்டுகள் மழை அளவை கணக்கீடும் போது ஜூன் ஜூலை மாதங்களில் தூத்துக்குடி திருச்செந்தூர் குலசை உடன்குடி பகுதிகளில் கனமழை பெய்த வரலாறே இல்லை.தூத்துக்குடி இந்தியாவின் வறண்ட இடமாக கருதப்படுகிறது.
கேரளா மாநில தென்மேற்கு பருவமழை?
இந்தியாவில் தென்மேற்கு பருவமழையில் அதிகம் மழை பெறும் மாநிலங்களுள் கேரளாவும் ஒன்று .ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கேரளாவில் சராசரியாக 2019 மிமீ மழை பொழியும். குறிப்பாக ஜூன் ஜூலை மாதங்களில் கேரளாவில் உச்சக்கட்ட மழை பொழியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கேரளாவில் மழை பற்றாக்குறை தொடர்கிறது.
குறிப்பாக ஜுன் ஜூலை மாதத்தை பொறுத்தவரை 2019 ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகள் கேரளாவில் மழை பற்றாக்குறையாக உள்ளது. கேரளா மாநிலத்தில் தொடர்ந்து மழை பற்றாக்குறையாக இருப்பது கவலைக்குரிய தகவலாகும்.
இந்தாண்டு வானிலை அமைப்பை பொறுத்தவரை நடுநிலை லாநினோ மற்றும் நடுநிலை இருமுனை நிகழ்வு தொடர்கிறது. எனவே இந்தாண்டு தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் சராசரி மழை பதிவாக வாய்ப்புள்ளது. குறிப்பாக எர்ணாகுளம் பத்தனம்திட்டா கோட்டயம் காசர்கோடு திரிசூர் கோழிக்கோடு கண்ணூர் ஆகிய மாவட்டங்கள் அதிகமழையை பெற வாய்ப்புள்ளது.
தெற்கு கேரளா பகுதிகளை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மழை பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளது.கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் கடலோர பகுதிகள் இயல்பை விட அதிகமழையை பெறும்.
தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமே அதிகப்படியான மழைப்பொழிவை பெறும் .இந்தாண்டு கன்னியாகுமரி நீலகிரி தென்காசி தேனி மாவட்டங்களில் இயல்பை விட அதிகமழை பெற வாய்ப்புள்ளது. அதே போல நாங்குநேரி அம்பாசமுத்திரம் தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் கொடைக்கானல் உத்தமபாளையம் வால்பாறை பொள்ளாச்சி ஆகிய 9 தாலுகா இயல்பை விட அதிகமழையை பெற வாய்ப்புள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளால் தடைபடும் மழை
தமிழ்நாடு இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. பொதுவாக பெரும் மழையை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைகளால் தடைபடுவதால் தமிழகத்திற்கு மழை கிடைப்பது இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை காலத்தில் மிக குறைவான மழையை பெறுகிறது சராசரியாக இம்மாநிலம் 329 மிமீ மழையை பெறுகிறது.
தென்மேற்கு பருவமழையால் அதிக பலன் பெறும் தமிழ்நாடு :
மழை மறைவு பிரதேசமான தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டின் சராசரி மழைப்பொழிவான 46 % மழை வடகிழக்கு பருவமழை வாயிலாகவே பெறுகிறது ஆனாலும் தமிழகத்தை வளம் கொழிக்க செய்யும் காவிரி, வைகை, பவானி, மனிமுத்தாறு தாமிரபரணி போன்ற எண்ணற்ற நதிகளின் பிறப்பிடம் மேற்கு தொடர்ச்சி மலையாக உள்ளது எனவே தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இயல்பை விட அதிகம் தென்மேற்கு பருவ மழை பெய்தால் தமிழகமே வளமாக இருக்கும்.
தமிழக பிற மாவட்டங்களின் நிலவரம் எப்படி?
கேரளா மற்றும் தமிழக மலை மாவட்டங்களில் மழை எப்போது குறைகிறதோ அப்போது தமிழகத்தின் பிற மாவட்டங்கள் வெப்பசலன மழையால் மழை பொழியும்.
தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருப்பத்தூர் இராணிப்பேட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இந்தாண்டு வெப்பசலன மழை இயல்பை விட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆனால் உள் மாவட்டங்களான விருதுநகர் மதுரை கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு. தூத்துக்குடி இராமநாதபுரம் மாவட்டங்களிலும் மழை பற்றாக்குறை ஏற்படும் . தென்மேற்கு பருவமழை கன்னியாகுமரி தென்காசியில் தீவிரமாக இருக்கும் நாட்களில் தூத்துக்குடி நெல்லை கிழக்கு பகுதிகளில் சாரல் மழை பெய்யும். மற்றபடி ஜூன் ஜூலை மாதங்களில் தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் மலைப்பகுதி தவிர பிற இடங்களில் பெரிய அளவு மழை பெய்யாது.
தென்மேற்கு பருவமழை துவங்கியதாக வானிலை ஆய்வு மையம் எதன் அடிப்படையில் அறிவிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்?
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை மே 23 , 24 ம்தேதி துவங்குகிறது. இதன் முன்னோட்டமாக மே 3 வது வாரத்திலேயே கேரளா மற்றும் தமிழக மலையோர பகுதிகளில் மழை பெய்யும். அதன் பின்னர் மே 23 ம்தேதி முதல் பருவமழை தீவிரமடையும்.
OLR மதிப்பு 200 க்கு கீழ் குறைய வேண்டும் மேலும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் 600 HPA அளவில் மேற்கு திசை காற்று வலுவடைய வேண்டும். மேலும் திருவனந்தபுரம் புனலூர் கொல்லம் கோட்டயம் கொச்சின் கோழிக்கோடு ஆகிய இடங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் மழை பதிவாக வேண்டும். மேலும் தமிழ்நாட்டிலும் குளச்சல் செங்கோட்டை பகுதிகளில் மூன்று நாட்கள் விட்டு விட்டு மழை பதிவாக வேண்டும்.
இந்த விதிகளை எல்லாம் பூர்த்தியடையும் போது தென்மேற்கு பருவமழை துவங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிடும். தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கி ராஜஸ்தான் மாநிலத்தை அடைந்தால் நாடு முழுவதும் தென் மேற்கு பருவக்காற்று சென்றடைந்துள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
குற்றால நிலவரமும் அணைகளின் நீர்மட்டமும் :
தென் மேற்கு பருவமழை காலத்தில் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக குமரி நீலகிரி கோவை மாவட்டங்களில் அணைகளை நிரப்பும் அளவிற்கு நல்ல மழை பெய்யும். மேலும் பாபநாசம் மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தாலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்த அணைகள் நிரம்ப வாய்ப்பில்லை. குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படாது.
குற்றாலத்தை பொறுத்தவரை மே 4 வாரத்தில் சீசன் களைகட்டும். மேலும் ஜுன் ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை கேரளா தமிழகத்தில் இடைவெளி விட்டு காணப்படும் அந்த நாட்களில் அருவிகள் களையிழந்தும் காணப்படும். தொடர்ந்து 4 மாதங்களிலும் அருவிகளில் நீர்வரத்து சீராக இருக்காது. தற்போதைய நிலவரப்படி மே 4 வாரத்தில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு.
இந்தியாவின் வளர்ச்சி வறட்சி மற்றும் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் தென்மேற்கு பருவமழையை நாம் வரவேற்க தயாராக இருப்போம். நன்றி.
-Tenkasi Weatherman.
Our Earth,Our Pride