தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைவது எப்போது?
கேரளா மற்றும் தமிழகத்தில் மே 24 ம்தேதி தென்மேற்கு பருவமழை துவங்கியது. கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்த மழையானது தற்போது படிப்படியாக குறைய துவங்கியது . பொதுவாக தமிழ்நாட்டினை பொறுத்தவரை மார்ச் 1 முதல் மே 31 வரையிலான காலக்கட்டத்தில் பதிவாகும் மழையை கோடைகாலமழையாக கருதப்படும். ஜூன் 1 ம்தேதி முதல் பதிவாகும் மழைதான் தென்மேற்கு பருவமழை கால அளவுகளில் சேர்க்கப்படும்.
இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை துவங்கினாலும் இன்றுதான் தமிழகத்திற்கு கோடைகாலம் நிறைவு பெற்றுள்ளது. மார்ச் 1 முதல் இன்று மே 31 வரையிலான கோடைகாலத்தில் தமிழகம் சராசரியாக 246 மிமீ மழையை பெற்றுள்ளது இது இயல்பை விட 97% அதிகமழையாகும். இந்த கோடைகாலத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் அதிகமழையை பெற்றிருக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் சராசரியாக 601 மிமீ மழையும் கன்னியாகுமரி 517 மிமீ மழையும் கோயம்புத்தூர் மாவட்டம் 511 மிமீ மழையும் திருநெல்வேலி 468 மிமீ மழையும் தென்காசி 375 மிமீ மழையும் பெற்றுள்ளது.
மேலும் இந்த கோடைகாலத்தில் தமிழகத்தில் மலை மாவட்டங்களிலுள்ள அணைகளுக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 120 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் பல அணைகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க மே மாதம் : தமிழகத்தில் இந்தாண்டு மே 2 வது வாரத்திலேயே கோடை வெயில் முடிவுக்கு வந்தது. மேலும் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடைகாலத்திலேயே பருவமழை துவங்கிய காரணத்தால் தமிழகம் முழுவதும் இயல்பை விட வெப்பநிலை குறைவாகவே பதிவாகி விட்டது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மே மாத பகல் நேர வெப்பநிலை 29°© ஆக பதிவானது. மேலும் தென்காசி குமரி கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் ஊட்டிக்கு நிகராக வெப்பநிலை குறைவாக பதிவானது. எனவே மே மாதத்தில் தமிழக தென்மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்கள் குளிரில் நடுங்கியது.
ஜூன் மாதம் எப்படி?
ஜூன் முதல் வாரத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை வலுகுறைந்தே காணப்படும். தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான குமரி நெல்லை தென்காசி தேனி கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களின் சமவெளி பகுதியில் அடுத்த 1 வாரத்திற்கு பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. மலையோர பகுதிகளில் மட்டும் அவ்வப்போது சாரல் மழை பெய்யும்
சமவெளி பகுதியில் மழை இல்லையென்றாலும் நீர்பிடிப்பு பகுதியில் ஜூன் 4 ம்தேதி வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்யும் என்பதால் அணைகளுக்கும் அருவிகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து இருக்கும்.
தென்மேற்கு பருவமழை மீண்டும் ஜூன் 2 வது வார இறுதியில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஜூன் 14 ம்தேதியை ஒட்டிய நாட்களில் மழை தீவிரமடைய சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
- Tenkasi Weatherman